சித்திரை திருவிழாவில் இன்று கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் என்கின்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார்.

Update: 2022-04-15 06:15 GMT

கள்ளழகர் - கோப்புப்படம் 

திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.


இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 20ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த பிப்ரவரி மாதம் 7ந் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. தொடர்ந்து முன்னோட்ட நிகழ்ச்சியாக கடந்த 1ந்தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது. மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனம் மற்றும் தசாவதார நிகழ்வின்போது கள்ளழகர் எழுந்தருளும் கருட, சேஷ வாகனங்கள் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்கின்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். முன்னதாக செல்லும் வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் சுந்தர ராஜப் பெருமாள் எழுந்தரு ளுகிறார். நாளை (15ந்தேதி) அதி காலையில் மூன்று மாவடி யில் கள்ளழகரை மதுரை மக்கள் வரவேற்று உபசரிக் கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படி மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளுக்குச் செல்லும் கள்ளழகர் மாலையில் தல்லாகுளம் பெருமாள் ஆலயம் வருகிறார். அங்கு இரவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

16ந் தேதி காலை 5.50 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேச, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 18ந் தேதி (திங்கள்கிழமை) மோகனி அவதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளல், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரம் நடைபெறுகிறது. 19ந்தேதி பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20ந்தேதி அப்பன்திருப்பதியில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் பகல் 1.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர்மலை வந்து சேருகிறார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. சுமார் 2ஆண்டு களுக்குப் பிறகு கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். எனவே பக்தர்களும் பொது மக்களும் சித்திரைத் திரு விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

விழாவையொட்டி சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சித்திரை திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாச லம் தலைமையில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News