தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும். அது தான் கடந்தகால வரலாறு. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை-டிடிவி தினகரன்;

Update: 2022-04-21 07:27 GMT

அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என்றும், ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை அதன் பொது செயலாளர் ஆக்குவோம் எனவும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரை வந்திருந்தார். மாட்டுத்தாவணி அருகே அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும். அது தான் கடந்தகால வரலாறு. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை. மாபெரும் தோல்வியை திமுக அரசு சந்தித்து உள்ளது. கோடநாடு பங்களா ஜெயலலிதா வாழ்ந்த இடம், அங்கு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமாக சரியான குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

அதிமுகவை ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்று மீட்டு எடுப்போம். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமையும். அதிமுக சின்னத்துடன் பேனர் வைத்த காரணத்தால் தான் முசிறி கட்சி பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அது, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

சசிகலா அதிமுகவை மீட்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். அதிமுகவை மீட்டு எடுத்து சசிகலாவை அதன் பொது செயலாளராக அமர்த்துவோம் என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Similar News