சோழவந்தான் அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2023-03-25 06:30 GMT

 அலங்காநல்லூர் அருகே  குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மரியம்மாள்குளம் பகுதி மக்கள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் வேண்டி அலங்காநல்லூர் தனிச்சியம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் இரண்டு நாட்கள் அப்பகுதிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்றும், இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், துணைத் தலைவர் மெர்லின் குமாரி, ஊராட்சி செயலாளர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி. மீண்டும் மின்சார விநியோகத்தை சரி செய்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு  செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

கோடை காலம் தொடங்கி விட்டது. எதிர்பார்த்த  மழை பொழிவு இல்லாததால் வறட்சி மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்துள்ளது.  கோடையை சமாளிக்க இரவு பகல் என்ற பாகுபாடின்றி  ஏசி, பிரிட்ஜ், மின் விசிறி போன்றவற்றின் பயன்பாடு  அதிகரித்துள்ளதால், மின் தேவையும் அதிகரித்து விட்டது. தற்போதைய தமிழகத்தின் தேவை வீடுகளுக்கான தடையில்லா மின்சார விநியோகம் மட்டுமே. இதில் எவ்வித இடையூறும் இல்லாது கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய  பொறுப்பு தமிழக மின்வாரியத்தில் கையில் உள்ளது. எனவே, இதில் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடையால் மக்கள் சாலைக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதைத்தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் என சமுக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News