வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை, முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2024-05-31 12:30 GMT

மதுரை, வாடிப்பட்டி அருகேதனிநபருக்கு ஆதரவாக வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் செயல்படுவதாக கூறி 100க்கும் மேற்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளி பள்ளம் கிராமத்தில், ரோட்டின் இருபுரமும் குடியிருப்பவர்களின் வீடுகளை ஆக்கிரமிப்பில் உள்ளது எனக் கூறிஅகற்ற வேண்டும் என, முள்ளி பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாட்டான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்டவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நெடுஞ்சாலை துறையினருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போது இது சம்பந்தமாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிராம பெரியவர்கள் முன்னிலையில் அவசரக் கூட்டம் நடத்தி இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று ஏற்பாடு செய்யும் வரை வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், தொடர்ந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மார்நாட்டான் நீதிமன்றத்தை நாடி ரோட்டின் இருபுரமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையிட்டதன் பேரில், தற்போது அதற்கான நடவடிக்கைகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது .

இந்த நிலையில், காலங்காலமாக அந்த பகுதிகளில் குடியிருந்து வருபவர்கள் உடனடியாக வீட்டை காலி செய்ய முடியாது என்றும் நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அரசு முறையாக பட்டா வழங்க வேண்டும் என்றும் எங்களுக்கு அரசு உறுதி செய்து கொடுக்க வேண்டும் என, கூறி வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர் .

மனு கொடுத்த பின்பு முள்ளிபள்ளம் ஊராட்சியில் சம்பந்தப்பட்ட இடத்தில் குடியிருப்பவர்கள் கூறும் போது நாங்கள் 30 வருடங்களுக்கு மேலாக முள்ளிப் பள்ளம் கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். திடீரென நாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர் . எங்களுக்கு குடியிருப்பதற்கு வேறு இடமில்லை மேலும், நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறோம். மாற்று இடம் கொடுத்தாலும் எங்களால் உடனடியாக போக முடியாது ஆகையால், நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மறுபரிசீனை செய்ய நெடுஞ்சாலை துறையினர் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்க வேண்டும். அதுவரை எங்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறினர் .

மேலும், அரசு புறம்போக்கு நிலத்திற்கு லஞ்சம் கொடுத்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ள சுந்தர்ராஜ் மகன் மாநாட்டான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவருக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்து இங்குள்ள 100க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News