சோழவந்தான் பகுதிகளில் அடிக்கடி மின்தடை; பொதுமக்கள் அவதி
சோழவந்தான் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, வடகாடுப்பட்டி கருப்பட்டி, இரும்பாடி, மற்றும் தேனூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, வடகாடுப்பட்டி பகுதியில், இரவு நேரங்களில் மூன்று முதல் ஐந்து மணி நேரங்களுக்கு மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தேனூர் ஊராட்சி பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகவும், இதுகுறித்து, மின்சாரதுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருப்பட்டி பகுதியில், மின்தடையால் இரவு நேரத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கருப்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் பராமரிக்கப்படாமல், இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இருட்டாக இருப்பதால் பெண்கள் அச்சத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.