மதுரையில் தடையை மீறி வைகை ஆற்றில் தர்ப்பணம் -பொது மக்கள் திரண்டனர்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, மதுரை வைகை ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2021-10-06 11:10 GMT

தடையை மீறி வைகை ஆற்றில் தர்ப்பணம்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், திருவேடகம் மற்றும் சோழவந்தான் வைகை ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

மகாளய அமாவாசையை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருவேடகம் சாய்பாபா கோயில் அருகே உள்ள வைகை ஆற்றில் மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆற்றங்கரை நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில், திருவேடகம் சோழவந்தான் சாய்பாபா கோவில் அருகில் உள்ள வைகை ஆற்றில் பொதுமக்கள் தடையை மீறி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பொதுமக்கள் கூறும்போது: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த மனநிறைவை தருகிறது. அதுவும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், பன்னிரண்டு வருடங்கள் கொடுப்பதற்கு சமம் என்றும், மேலும் இங்கு உள்ள திருவேடகம் ஏடகநாதர் சிவன் தளமானது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் காசிக்கு நிகராக இந்த கோயில் விளங்குகிறது. இங்கு தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த மனநிறைவைத் தருவதாக கூறும் பொதுமக்கள் கோவிலில் அரசு வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்வதற்கு உள்ள தடைகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அர்ச்சகர் பரசுராம் கூறும்போது இந்த அம்மாவாசை ஆனது புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை என்று பெயர். இந்த தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து மோட்ச தீபம் ஏற்றினால், முன்னோர்கள் நமக்கு ஏதாவது சாபம் கொடுத்து இருந்தால் அது நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலில் கடந்த 15 நாட்களாக பூஜை நடைபெற்று வருகிறது . மேலும், இன்று திதி கொடுக்கும் பட்சத்தில் புத்திர பாக்கியம் பெருகும் மற்றும் வம்சம் விருத்தியாகும் என்றும் பொதுமக்கள் தங்கள் மனதில் நினைத்துக் கொள்கின்றனர். இந்த அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது என்று கூறினார்.

Tags:    

Similar News