சோழவந்தான் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் ஓட்டை உடைசல் பஸ்கள்

சோழவந்தான் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

Update: 2024-03-25 09:04 GMT

மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்து.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து  50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில், பல்வேறு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாததன் காரணமாகவும் பேருந்து சீட்டுகள் இல்லாமலும் சைடு கண்ணாடிகள் எப்போது விழும் என்ற நிலையிலும் படிக்கட்டுகள் பெயர்ந்த நிலையிலும், இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது

குறிப்பாக ஒரு சில பேருந்துகளில் டிரைவர் சீட்டுக்கு அருகில் உள்ள பகுதியானது மோசமான நிலையில் இருப்பதால், பேருந்து இயக்கும்போது கடமுடா என்று சப்தம் வந்து கொண்டே உள்ளது. இதனால், பேருந்தை இயக்கும் ஓட்டுனர்கள் அச்சத்துடனும் கடும் மன அழுத்தத்துடனும் பேருந்தை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஓட்டுநர் கூறும் போது, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து குறுவித்துறைக்கு செல்லும் 1238  என்ற எண் கொண்ட 93 ஆம் நம்பர் பேருந்து மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. அதுவும் பேருந்தை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. பஸ்ஸை, ஸடார்ட் செய்தாலே பயங்கர சத்தத்துடன் கட கட என பெரிய சத்தத்துடன் பேருந்து செல்வதால் உள்ளே பயணிக்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

மேலும், பேருந்து நிறுத்தங்களில் நடத்துனர் விசில் அடித்தாலும் ஓட்டுநருக்கு கேட்காததால் நிறுத்தங்களை தாண்டி பேருந்துகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுனர்கள் போக்குவரத்து கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News