மதுரை அருகே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிக்கொலை

மதுரை அருகே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-06-10 05:35 GMT

கொலை செய்யப்பட்ட சூர்யா.

அலங்காநல்லூர் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் மகன் சூர்யா (வயது22). இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சூர்யா சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிறை சென்று கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சூர்யா வீட்டில் இருந்த பொழுது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சூர்யாவை கொலை செய்ய முயன்றது.

இதனை சற்றும் எதிர்பாராத சூர்யா இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய அந்த கும்பல் சூர்யாவை வீட்டின் அருகே தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து எஸ்.பி அரவிந்த், டி.எஸ்.பி ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News