மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு.. சுவாதி மீது நீதிபதிகள் அதிருப்தி…
சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அவரது தோழி சுவாதி மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.;
கொலையுண்ட கோகுல்ராஜ்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த திருச்செங்கோடு போலீஸார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்து உள்ளார். இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று சுவாதி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார்.
அவரிடம் நீதிபதிகள் அழைத்து வந்ததில் ஏதேனும் சிரமம் இருந்ததா? என கேட்டனர். அதற்கு சுவாதி உரிய பாதுகாப்புடன் அழைத்து வந்ததாக தெரிவித்தார். கோகுல்ராஜ் உங்களுடன் படித்தாரா? சக மாணவர்களுடன் பேசுவதுபோல் உங்களுடன் பேசுவாரா? என நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு, சுவாதி ஆம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, 23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? என சுவாதியிடம் கேட்கப்பட்டது. ஆனால் கோகுல்ராஜை அன்று பார்க்கவில்லை என சுவாதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கோவிலில் பதிவான வீடியோவை காண்பித்து அதில் உள்ள பெண், பின்னால் வரும் ஆண் யார் என? கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என சுவாதி தெரிவித்தார். பின்னால் வருவது கோகுல்ராஜ் போல் உள்ளது என பதில் தெரிவித்தார்.
இதனால், மீண்டும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அப்போது சுவாதி வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து கூறுகையில், மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் வேறுபாடுகள் உள்ளது.
வீடியோவில் உள்ள உங்களை பார்த்து நீங்களே தெரியவில்லை என கூறுகிறீர்கள். ஜாதியை விட சத்தியம் முக்கியம். நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை கூறுவதாக சத்தியம் செய்தீர்கள். ஆனால், தற்போது முரணான தகவல்களை கூறி வருகிறீர்கள். மதத்தை விட சத்தியம், தர்மம், நியாயம் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பி உள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும் என கோபத்துடன் நீதிபதிகள் கூறினர். இதனை கேட்டவுடன் சாட்சி சொல்லும்போதே சுவாதி கண்ணீர் விட்டு கதறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, 15 நிமிடத்திற்கு பின் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே, பிறழ்சாட்சி கூறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பின்னர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சுவாதி கர்ப்பமாக இருப்பதால் பரிசோதனைக்காக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, சுவாதி வரும் 30 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.