கரும்பு, தென்னையை பாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் : விவசாயிகள் பெற வேளாண்துறை அழைப்பு

மதுரை மாவட்டம் மேலூர் விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தில் ஒட்டுண்ணிகள் கிடைக்கும் என அறிவிப்பு

Update: 2022-06-03 08:15 GMT

மதுரை  கரும்பு மற்றும் தென்னையை பாதுகாக்கும் டிரைகோகிரம்மா கைலோனிஸ்' முட்டை ஒட்டுண்ணி, கிரைசோ பெர்லா' புழுப் பருவ ஒட்டுண்ணி ஆகிய இரண்டும் மேலுார் விநாயகபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தில் விற்கப்படுகிறது.

இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்ட தகவல்: கரும்பில் வரும் இடைக்கணு புழுத் தாக்குதலை டிரைகோகிரம்மா கைலோனிஸ்' முட்டை ஒட்டுண்ணி கட்டுப்படுத்தும்.கரும்பு நட்ட 4வது மாதத்தில் தோகையில் முட்டை ஒட்டுண்ணியை கட்டி வைத்தால் அவை பூச்சியாகி இடைக்கணு புழு முட்டைகளின் மீது முட்டையிட்டு கட்டுப்படுத்தும். ஏக்கருக்கு 2 சி.சி. அட்டை வீதம் பயன்படுத்தலாம்.

ஒரு அட்டையில் 16ஆயிரம் முட்டைகள் இருக்கும்.நெல்லில் நாற்று நட்ட 30 வது நாளில் முட்டை ஒட்டுண்ணியை கட்டி வைத்தால் இலைச்சுருட்டு புழுத் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.கத்தரி, வெண்டை, தக்காளியில் 50 சதவீத பூக்கும் பருவத்தில் முட்டை ஒட்டுண்ணியை கட்ட வேண்டும். 10 நாள் இடைவெளியில் 6 முறை இப்படி செய்து காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

தென்னையில் வெள்ளை சுருள் ஈக்களை கிரைசோ பெர்லா' புழு பருவ ஒட்டுண்ணி கட்டுப்படுத்தும். ஒரு எக்டேருக்கு 1000 முட்டைகள் தேவைப்படும். 4 தென்னை மரங்களுக்கு ஒன்று வீதம் இலையில் புழு பருவ ஒட்டுண்ணியை கட்டி வைக்க வேண்டும்.இவற்றிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் சுருள் ஈக்களின் இளம்பருவ பூச்சிகளை தின்று விடும். தட்டைப்பயறு பயிரிட்டால் அஸ்வினி பூச்சிகள் உருவாகும். அந்த பூச்சிகளையும் இந்த ஒட்டுண்ணி தின்று விடும். விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்பெறலாம். அலைபேசி: 94898 74206.

Tags:    

Similar News