9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பு செல்ல தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

இப்பிரச்னை தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்தவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு முடித்து வைப்பு

Update: 2021-11-24 17:45 GMT

திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வகாப்தீன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தமிழ்நாடு அரசு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில்  கொரோனா நோய் தொொற்றின் அலை மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்புக்கு வரவேண்டும் எனக் கூறுகின்றனர்.

மேலும், சில பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவதில்லை. சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக மாணவர்களை கற்பித்தல் இல்லை எனக் கருதி நேரடி வகுப்புக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு எந்தவித பிரச்னையும் இன்றி இயங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டது . அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த சூழலில் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News