நமக்கு நாமே திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்: மதுரை ஆட்சியர் தகவல்

நமக்கு நாமே திட்டத்தில் இந்த ஆண்டுக்கான நிதியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள எதிர்வரும் மே 15 க்குள் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-04-29 08:30 GMT

மதுரை மாநகராட்சியில்  நமக்கு நாமே திட்டத்தில் இந்த ஆண்டுக்கான நிதியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள எதிர்வரும் மே 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இது தொடர்பாக ஆணையாளர்  கா.ப.கார்த்திகேயன் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, வெற்றிகரமான திட்டமான நமக்கு நாமே திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு, தற்போது 2022-23 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.7.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.2.47 கோடி திரட்டப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நலஅமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்.நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால் அரசு சார்பில் கூடுதலாக இரு பங்கு வரை நிதி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள், பொதுமக்களுக்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீர்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை அமைத்தல், மின் மயானங்கள் அமைத்தல், சாலைகள் சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தில், பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டத்தை தேர்வு செய்து அதற்கான விண்ணப்பத்தை எதிர்வரும் மே 15, 2022க்குள் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அல்லது நகரப்பொறியாளரிடம் வழங்கலாம்.  மேலும், விவரங்களுக்கு அந்தந்த மண்டல உதவி ஆணையர்களை நேரிலோ அல்லது உதவி ஆணையாளர்கள் (மண்டலம் 1- 94987-49001), (மண்டலம் 2 - 94987-49002), (மண்டலம் 3 - 94987-49003), (மண்டலம் 4 - 94987-49004), (மண்டலம் 5 - 94987-49005) ஆகிய எண்களில் தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என   தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News