மதுரையில் சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம்: மாநகராட்சி
சாலையில் சுற்றி திரிந்த 29 மாடுகள் எருமைகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.50,800 அபராதம் விதிக்கப்பட்டது;
மதுரையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சாலைகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பல்வேறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மாநகராட்சியால் அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ,மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவின் அலுவலர்கள் குழுவின் மூலம் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரிந்த 29 மாடுகள் மற்றும் எருமைகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.50,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களது பாதுகாப்பில் தங்களுக்குரிய இடத்தில் மாடுகளை தொழுவத்தில் கட்டி பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் வளர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் கால்நடைகளை திரியவிடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணையர் கா.ப. கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.