திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றி தெரிவித்த மதுரை ஆதீனம்

முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது -மதுரை ஆதீனம்

Update: 2022-05-09 08:34 GMT

தருமபுர ஆதினத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கிய நிலையில் மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிய பரமாச்சாரியர் மடத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது " ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன். பட்டணப் பிரவேச என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் சொல்ல மாட்டார். ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ள போவதில்லை. முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மேலும், ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர். அது குறித்து அரசுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது. ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சன்யாசி தர்மங்களை ஆதீனங்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு கேள்விக்கு, சந்நியாச தர்மங்களை நான் முழுமையாக பின்பற்றுகிறேன் என்றுபதில் அளித்தார்.

பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு பற்றி கேட்டதற்கு, மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார்.

Tags:    

Similar News