இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு விளக்கம்

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த வழக்கு- இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-30 09:54 GMT

மதுரை உயர் நீதிமன்றம் கிளை

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த வழக்கு."இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க இயலாது" என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வசித்து வரும் இலங்கையை சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல்வேறு முகாம்களில் குடியேற்றப்பட்டனர். அந்த வகையில் தற்போது வரை தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 60 ஆயிரம் அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என திமுக தலைமயிலான தமிழக அரசு பல கோரிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கடந்த 2019 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்திய குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும், அதை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இலங்கை அகதிகள் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு மாறி இருப்பதால், இது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என திருச்சி கொட்டப்பட்டு முகாம் அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார்.

எனினும் தனி நீதிபதி அளித்த உத்தரவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கூறி, இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும் என கூறி, குடியுரிமை தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதனிடையே மத்திய அரசு வட நாடுகளில் வசிக்கும், அண்டை நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News