மதுரையில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் நிதி திரட்டி காவலர்கள் உதவி செய்தனர்.
தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் உமா வாசுகி. இவர் மதுரை மாநகர ஆயுதப்படை பிரிவில் தலைமை பெண் காவலராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் உமா வாசுகி கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி கள்ளக்குறிச்சி செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் உயிரிழந்த பெண் காவலர் உமா வாசுகியின் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு சக காவலர்கள் உதவ நினைத்தனர்.
அதன்படி 1997 ம் ஆண்டை சேர்ந்த 2வது பேட்ஜ் காவல் குழுவினர் இணைந்து தமிழகம் முழுவதும் சக காவலர்களிடம் நிதி வசூல் செய்து சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் உமா வாசுகி குடும்பத்திற்கு 15லட்சத்து 30ஆயிரம் ரூபாயை நிதி உதவியாக வழங்கினர். மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா முன்னிலையில் பெண் காவலர் குடும்பத்திற்கு, அவரது மகள் கல்விச்செலவுக்கு இந்த தொகையினை அளித்தனர்.