மதுரை மாநகராட்சி பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உதவி ஆணையர்

மதுரையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டிருந்தார்

Update: 2021-07-22 01:59 GMT

மதுரையில் நடைபெறும் நான்கு நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இந்தநிலையில், மதுரையில் மோகன் பகவத் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், 'மதுரை மாநகராட்சி மண்டலம் சத்யசார் நகரில் அமைதுள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் 22-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை நேரில் கலந்துகொள்ள உள்ளார்.

எனவே, அவருடைய வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில் சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திடவேண்டும்.அவர் பயணிக்கு நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை கண்காணித்தல் போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இருக்கும் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்துவரும் சண்முகம் 21.07.21 பிற்பகல் மதுரை மாநகராட்சி பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News