எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மதுரையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Update: 2023-03-12 12:42 GMT

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் வைத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இளைஞர் ஒருவர் தவறான வார்த்தைகளால் பேசியபடி அதை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். அப்போது, அந்த இளைஞரின் செல்போனை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மாவட்ட கழக செயலாளர்களுமான செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமி மீது திட்டமிட்டு வழக்கில் சேர்த்து பொய்யான குற்றச்சாட்டை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கை பதிவு செய்து உள்ளனர்.

இரவு நேரத்தில் ஜோடிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு முன்னாள் முதல்வர் மீது பதிவு செய்துள்ள வழக்கை படித்தால் மனமே பதறுகிறது. இந்த அரசாங்கத்தின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கால் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஜெயம் தியேட்டர் அருகில் நாளை காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதிமுகவை அடக்கி ஒடுக்கி விடலாம் என ஸ்டாலின் நினைத்தால் அது பகல்கனவு தான். அது கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் நன்றாக தெரியும். இதுபோன்ற சம்பவம் எங்கேயுமே நடந்தது இல்லை. நாங்கள் எங்கையுமே இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொண்டது இல்லை.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததில் என்ன நியாயம் உள்ளது. அரசியல் நாகரிகம் தெரியாத ஸ்டாலின் என்பது இந்த வழக்கால் தெரிய வருகிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக காவல்துறை உள்ளது.

அமமுக நபர் தரக்குறைவாக நடந்த போதும், எடப்பாடி பழனிசாமி கண்ணியக்குறைவாக நடக்கவில்லை. மாசற்ற தங்கமாக எடப்பாடி பழனிசாமி சம்பவம் நடந்த போது இருந்தார். குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து வழக்குப் போடுவதை பார்த்தால் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு போய் உள்ளது என்பது தெரியும். கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள் ஆசுவாசப்படுத்தி உள்ளோம்.

அவதூறால் புழுவுக்கு கூட கோபம் வரும், ஆனால் புன்னகையோடு எடப்பாடி இந்த சம்பவத்தை கடந்து சென்றார். ஒருதலைப்பட்சமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதியப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதால் இந்த அராஜத்தை அரங்கேற்றி உள்ளனர். தனிநபர் தாக்குதலை எந்தவொரு மனசாட்சி உள்ள நபரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மூவரும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News