தடுப்பணை உடைப்பு: விவசாயிகள் வேதனை

தடுப்பணை உடைபட்டதால், விளைச்சலில் உள்ள நெற்பயிர்கள் கருகி வருகின்றன. விவசாயிகள் உடைபட்ட அணையினை சரி செய்தாலும் மீண்டும் அதை உடைகின்றனர். எனவே தடுப்பணை கட்டிதரக் கோரி மதுரை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.;

Update: 2021-02-23 13:00 GMT

மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதி விவசாயிகள் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் எங்களது சிந்தாமணி பகுதியில் சுமார் 600 ஏக்கர் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் உள்ளன, இவற்றில் தற்போது நெல் சாகுபடி செய்திருக்கிறோம். இதற்கான நீர் ஆதாரம் கோச்சடையில் இருந்து ரயில்வே காலனி வழியாக அவனியாபுரம் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலில், சிந்தாமணி பகுதியில் தடுப்புஅணை அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. பணியின்போது மதகுகள் உடைக்கப்பட்டன பின்னர் மதகுகள் கட்டாமல் விட்டுவிட்டனர். இதனை அடுத்து எங்கள் பகுதிக்கு வர வேண்டிய நீர்வரத்து தடைபட்டுள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நெல் நன்றாக விளைந்து உள்ள நிலையில் தண்ணீரின்றி கருகி வருகின்றது.

இதனால் சம்பந்தப்பட்ட இடத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி மணல் மூட்டைகள் அமைத்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுத்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் அடைத்து வைத்திருந்த தடுப்பணைகளை அகற்றியுள்ளனர்.

இதனால் தற்போது தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு இந்த பகுதியில் நிரந்தரமாக மதகு அணை கட்டித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த பகுதியில் நீண்ட நாட்களாக விவசாயம் செய்து வருகிறோம். அதன் தடுப்பணை உடைக்கப்பட்டதால் தற்போது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நேரில் மனு கொடுத்துள்ளோம், அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News