மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை வைகை ஆறு வடகரையோர பகுதிகளான புளியந்தோப்பு, மதிச்சியம் ஆகிய பகுதிகளில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புவாசிகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியின் நடவடிக்கைகளை கண்டித்தும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து அடுப்புவைத்து சமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கயிற்றால் தூக்கிலிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் தாய்மார்கள் பச்சிளங்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மாநகராட்சி மற்றும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்துசென்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறும் குடியேறும் போராட்டத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.