கார்வேபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மனு

கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதுவரை நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காததால், கிராம மக்கள் ஆட்சியர்அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-11-15 16:01 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி கார்வேபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் சார்பில், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி தாலுகா தேவசமுத்திரம் ஊராட்சி ஏரிக்கோடியை ஒட்டியுள்ள கார்வேபுரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மேலும் ஏரிப்புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, குடியிருக்கும் வீட்டை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர்.

மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேறி விஷ பூச்சிகளும், மழை நீருடன் கழிவுநீரும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடிநீரும், இதர பயன்பாட்டிற்கான தண்ணீரும் இரண்டுமே ஒன்றாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளன. எந்த வீட்டிலும் முறையான கழிப்பறைகள் இல்லை. இதனால் பெண்களும், வயதான வர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சுகாதார சீர்கேடு, அபாயகரமான வாழ்க்கை சூழல் காரணமாக இளம் வயது மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் வயதில் உள்ள பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளியை விட்டு நின்று விட்டனர். இதனால் குழந்தைகள் வீட்டில் இருப் பதால், வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப் பட்டு குழந்தை தொழிலாளர்களாக உருவாகி உள்ளனர்.

10 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்துள்ளனர். இந்த பன்றி வளர்ப்பதை விட்டு விட்டால், ஒரு நல்ல நிரந்தரமானஇடம் வழங்கப்படும் என்று அப்போதைய அரசு அலுவலர்கள் சிலர் சொன்னதை நம்பி ஒட்டு மொத்தமாக பன்றி மேய்க்கும் தொழிலை விட்டு விட்டனர். ஆனாலும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே இங்கு வசிப்பவர்களுக்கு அரசு நல்ல இடம் ஒதுக்கி வீடு கட்டி, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை செய்துதர வேண்டும் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News