கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் கிராமப்புற இணையதள வசதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற இணையதள வசதி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2024-01-05 16:27 GMT

பைல் படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 333 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்க பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது (Optical Fiber Cable) 85% மின்கம்பங்கள் மூலமாகவும் 15% தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 314 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது.

இத்திட்டத்திற்கான Rack/UPS உள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம சேவை மையம் (VPSC) அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட அறையானது சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரால் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும் தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், POP பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்றப் பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர் அரசு ஆணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளார்.

கண்ணாடி இழை (Optical Fiber Cable) 85 % ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை (Optical Fiber Cable) கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே, இக்கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது.

மேலும் விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எந்த விதமான உலோக பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம்.

இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெறமுடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Router, Rack மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடமைகளாகும்.

மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடைச்செய்யும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News