கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Update: 2023-12-28 15:13 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித்துறை வாயிலாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ரூ.10000/- ரூ.7000/- மற்றும் ரூ.5000/- ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் சென்னையில் நடைபெறும் மாநிலப்போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். 2023-2024 ஆம் ஆண்டுக்கான 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.01.2024 அன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முற்பகல் 9.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 10.01.2024 அன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முற்பகல் 9.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி / கல்லூரிகளுக்கும் முதன்மைக்கல்வி அலுவலர் / கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1.போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம்.

2.போட்டியில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று

பரிந்துரையுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

3.ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும்.

4.ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

5.போட்டியில் பங்கேற்கும் மாணவருக்குப் பயணப்படி வழங்க இயலாது.

6.கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம்பரிசு ரூ.7000/-, மூன்றாம்பரிசு ரூ.5000/-, சான்றிதழும் வழங்கப்பெறும்.

7.எழுதுவதற்கான வெள்ளைத்தாள்கள், எழுதுகோல் தமிழ்வளர்ச்சித்துறையால் வழங்கப்பெறும்.

8.போட்டி நாளன்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பெறும்.

9.போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அறிவிக்கப்படும்.

10.ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு, அரசு செலவிலேயே அனுப்பப் பெறுவர்.

இப்போட்டிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 11,12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமும் பரிந்துரைப் பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News