பாஜக அமைச்சரின் உதவியாளர் மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு! கணக்கில் வராத பணம் பறிமுதல்!

கர்நாடக அமைச்சரின் உதவியாளராக இருக்கும் மஞ்சுநாத்தின் மருமகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 1.20 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-03-31 11:58 GMT

லோகேஷ் குமார்.

ஒசூர் மாநகராட்சி, பழைய பேருந்து நிலையம் சீதாராம் நகர் அடுத்த ஜலகண்டேஸ்வரர் நகர் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ் குமார். இவர் எஸ்ஏபிஎல் ப்ளூ மெட்டல் என்ற பெயரில் கிரசர் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி முதல் ஓசூர் வருமான வரித்துறை துணை ஆணையர் விஷ்ணு பிரசாத் தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் வருமான வரி தொடர்பான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் 28ஆம் தேதி, இவர் பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி காரில் வந்த போது, அவரது காரில் தேர்தல் பிறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, வருமான வரித்துறையினர் இந்த சோதனையை அவரது வீட்டில் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் இருந்து நடைபெற்று வரும் இந்த சோதனை தொடர்ந்து, அவரது வீட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையின் தற்போதைய நிலவரமாக, அவரது வீட்டில் இருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

லோகேஷ் குறித்த மற்றொரு தகவல் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பைரதி பசவராஜ், தற்போதும் 4வது முறையாக எம்எல்ஏவாக உள்ள நிலையில், பைரதி பசவராஜ் என்பவரின் உதவியாளர் மஞ்சுநாத் என்பவரின் மருமகன் தான் லோகேஷ் என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News