கே.ஆர்.பி. அணை நிரம்புகிறது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-11 15:18 GMT

கேஆர்பி அணை -  கோப்புப்படம் 

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

தற்போது கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து அணைக்கு 1114 கனஅடி நீர் வரும் நிலையில் 1176 கன அடி அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 22ம் தேதி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியபோது பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News