கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம்

முதலமைச்சர் வருகிற 22ம் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதைதையொட்டி அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-11-02 12:00 GMT

அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 22ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சரயு, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கூறுகையில், வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் திடீர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளலாம். எனவே அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பதிவேடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தணிக்கைக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கேட்கும் விவரங்களை தெளிவாகவும், சுருக்கமாகவும் தெரிவிக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி குப்பைகளை தேங்க விடாமல் அகற்றப்பட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடி தண்ணீர் வழங்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

தேசிய, மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் செடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தூய்மை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையின் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பழுதுகள் ஏற்பட்டிருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டப்பணிகள் ஆய்வு செய்ய நேரிடும் என்பதால் அனைத்து இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டு உரிய நேரத்தில் காலை உணவு பரிமாற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காத நிலையை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை தூய்மைபடுத்தியும் குழந்தைகளின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் தூய்மை பணிகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் அனைவரும் பணியில் இருக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக பொது மக்களிடமிருந்து இணைய தளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் நிலுவை இல்லாமல் அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து துறை முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் நடத்த ஏதுவாகவும் புள்ளிவிவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர், கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுந்தராஜ், கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் பாபு, ஓசூர் உதவி ஆட்சியர் (பொறுப்பு) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News