ஊத்தங்கரை அருகே வீட்டிலேயே பிரசவம்: பெண் பரிதாப உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-11-09 04:18 GMT

பைல் படம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (28), ஜேசிபி ஆபரேட்டர். இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி பகுதியை சேர்ந்த மாது மகள் ஹேமலதா (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மெய்யழகன் (2) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் ஹேமலதா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ‘பிரசவ வலிதான் ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க தெரிவித்துள்ளனர். இதனை ஹேமலதாவின் குடும்பத்தினர் கேட்காமல் வீட்டிற்கு சென்று விட்டார்களாம். சில மணி நேரங்களில் ஹேமலதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து, ஹேமலதா மற்றும் குழந்தையை மீட்டு குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹேமலதாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஹேமலதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News