காஞ்சிபுரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தென்னங்கன்று, பரிசுகள்

காவாந்தண்டலம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தென்னங்கன்று மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-10-23 08:30 GMT

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மரக்கன்று மற்றும் பரிசு பொருட்கள் வழங்கபட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஓய்வெடுக்கும் வகையில் இம்முகாம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 530 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராம ஊராட்சி சார்பில் அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்  ராதா விஜியக்குமார் பரிசாக தென்னை மரக்கன்றுகளும் பரிசுப்பொருட்களும் வழங்கி பொதுமக்களை ஊக்கப்படுத்தினார்.

காவந்தண்டலம் கிராம ஊராட்சியில் இதுவரை 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திமுக கிளைக் கழக செயலாளர் ஓம்சக்திவரதன், துணைத்தலைவர் சரஸ்வதிசீனுவாசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கர், தவமணி மூர்த்தி,ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News