ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள்

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின்றி தவித்து வருகின்றனர்.

Update: 2021-09-29 04:45 GMT

பெருநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை குறித்து விளக்கும் அப்பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தவும் , எந்த ஒரு நல்ல திட்டத்தையும் பெறவம் ஆதார் பதிவு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மிக மிக அவசியமாக உள்ளது.

இந்நிலையில் ஆதார் பதிவு மேற்கொள்ளுதல் திருத்தம் இதேபோல் வாக்காளர் அட்டையில் புதியதாக சேர்த்தல் நீக்குதல் பிழைத்திருத்தல் என பல முகாம்கள் நடைபெற்று வந்தாலும் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இன்னும் கிடைக்கப் பெறுவில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளது உத்தரமேரூர் அடுத்த பெருநகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி.

இங்கு கடந்த காலங்களில் இவர்களுக்கென 63 வீடுகள் அரசு கட்டிக்கொடுத்து இருப்பினும் தற்போது 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இவர்களது பிள்ளைகள் தற்போது பொறியியல் விவசாயம் கலை மற்றும் அறிவியல் என பட்ட மேற்படிப்புகள் படித்து வருகின்றனர்.

இவர்களில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் தற்போதுவரை ஆதார் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எதுவும் பெறவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கென மத்திய , மாநில அரசுகள் நலதிட்ட உதவிகளை செயல்படுத்தி வரும் நிலையில் இவர்கள் இது போன்ற ஆவணங்கள் இல்லாததால் நலத்திட்ட உதவிகள் பெறுவதிலும், ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் கடமையையும் தவழும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது இவர்கள் அனைவரும் ஆதார் பதிவு மேற்கொள்ள அங்குள்ள படித்த இளைஞர்கள் குழு இவர்களிடம் விண்ணப்பம் அளித்து புகைப்படம் பெற்று இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் இணைத்து தற்போது ஆதார் பதிவிற்கு வட்டாட்சியர் அலுவலகம் செல்ல உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றன.

அரசு திட்டங்கள்,  அடிப்படை உரிமைகள் குறித்து இப்பகுதி மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News