உத்திரமேரூர் அருகே வாகன சோதனையில் 240 டவல்கள் பறிமுதல்
உத்திரமேரூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 240 டவல்களை சிறப்பு வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு இருபத்திநான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் உத்தரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி பகுதியில் சிறப்பு வட்டாட்சியர் சத்யா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, எந்த ஒரு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் பத்தாயிரம் மதிப்புள்ள 240 டவல்களை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.