வல்லக்கோட்டை : முறைகேட்டில் ஈடுபட்ட கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

திருக்கோயில் வரவு செலவுகளில் பல லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வல்லக்கோட்டை கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யபட்டார் .

Update: 2021-08-28 09:30 GMT

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயல் அலுவலர் இந்துமதி.

காஞ்சிபுரம் மாவட்டம் ,  ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , வல்லக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

சென்னை புறநகருக்கு மிக அருகில் உள்ளதால் நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் ஆடி , தை கிருத்திகை உள்ளிட்ட பல விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் காணிக்கை மற்றும் நேர்த்திக்கடனை செலுத்த வருகை புரிவர்.

இத்திருக்கோயிலை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கோவில் செயல் அலுவலராக  இந்துமதி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருக்கோயில் திட்டங்கள் மற்றும் பல்வேறு பணிகளில் முறைகேடு செய்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர் புகார் வந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அன்னதான திட்டம் , கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகளில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்து உள்ளதாக இந்துமதி மீது குற்றச்சாட்டு உறுதியானது.

இதனைத் தொடர்ந்து இந்துமதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டு புதிய செயல் அலுவலராக  நற்சோணை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்துமதி இதே வல்லக்கோட்டை முருகன் கோயில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியாற்றியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், தற்போது வரை மூன்று முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இணை ஆணையராக பதவி உயர்வு பெறும் நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News