ஆன்லைன் ரம்மியால் 500-க்கும் மேற்பட்டோர் தற்கொலை - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர் என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

Update: 2022-11-30 11:15 GMT
சுங்குவார்சத்திரத்தில் நடந்த  பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ,  சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. முதலமைச்சருக்கும், ஆளுநருக்கு பிரச்சனை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த நான்கைந்து ஆண்டுகளில் , எங்களுக்கு தெரிந்து 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர் இருக்கலாம். இந்த 15 மாதத்தில் மட்டும் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமானது தான். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி. தமிழக அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பா.ம.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மக்களிடம்  கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது.

எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை . திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது, என்பதால் அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியும், அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிக அளவு இளைஞர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் போதை பொருட்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு 10 நாட்கள் வேலை செய்தார்கள். ஆனால் மீண்டும் போதை பொருள் விற்பனை நடைபெற்றுக்கொண்டு  தான் வருகிறது. முதலமைச்சர் இது குறித்து மாதம் ஒரு  கூட்டம் நடத்தி, காவல்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் இருக்க உத்தரவிட வேண்டும். போதை பொருள் விற்பனை நடைபெற்றால் ,அந்த பகுதியில் இருக்கும் உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கூட தயங்க கூடாது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை விட மிக மோசமான நிலைக்கு நமது தமிழகம்  சென்று விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News