மாங்காடு : கோயில் நிலத்தில் பேருந்து நிலையம்,அமைச்சர்கள் ஆய்வு

மாங்காட்டு கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-08-09 11:30 GMT

மாங்காடு கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆகியோர் இன்று  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  அமைச்சர் பி.கே.சேகர்பாபு  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, மாங்காடு பேரூரட்சி பகுதியில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்  தொழிற்துறை அமைச்சரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆகியோரால் இந்த இடத்தில் ஏற்கனவே போக்குவரத்திற்காகவும், பயணிகளுக்காகவும் ஒரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை நேரடியாக சென்று கள ஆய்வு செய்துள்ளோம். மேற்படி, 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, இந்த இடத்தில் இருக்கின்ற கழிவு நீரை அகற்றி, ஒரு வரைவுத் திட்டம் தயாரித்து எப்பொழுதும் தண்ணீர் நிற்காத அளவிற்கு மேம்படும்படுத்த வேண்டுமென்ற ஒரு உத்தரவை பக்தர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு நிதி ஆதாரம் இல்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பணி நிலுவையில் இருக்கின்றது. 

ஓரிரு மாத காலங்களுக்குள் இந்த வரைவு திட்டத்தை மீண்டும் புதுப்பித்து, இதற்குண்டான டெண்டர் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்வதற்கு அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி  முதலமைச்சரிடம் கொண்டு சென்று போதிய நிதி ஆதாரத்தைப் பெற்று இத்திட்டத்தால் இப்பகுதி மக்கள் சிறந்த முறையிலே பயனடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ,  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News