மதுரமங்கலத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்!

மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையுடன் கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-27 13:30 GMT

மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்காக உருவாக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுரமங்கலம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு, முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பரிசோதனை முடிவுகளில் குறைவான தொற்று உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

மேலும் சாதாரண கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தற்போது இங்கு 20 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News