பரந்தூர் விமான நிலையம் எதிர்த்து 4 கிராம மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பரந்தூரில் அமைய உள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக இப்பகுதியில் அமைந்துள்ள 12 கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர், கடந்த 58 நாட்களாக இரவு நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இன்று ஏகனாபுரம் , நெல்வாய் , மேலேரி, நாகப்பட்டு ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள 180 பள்ளி மாணவ , மாணவிகள் இன்று வகுப்பறைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.