தனியார் கேளிக்கை விடுதி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

Dead News -எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி விடுதி கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய முயன்ற போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

Update: 2022-10-21 08:00 GMT

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கேளிக்கை விடுதியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய முயன்ற போது அதில் சிக்கி உயிரிழந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Dead News -இந்தியாவில் கடந்த வருடத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்த தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை மட்டும் 941. அதிக தூய்மைப் பணியாளர்கள் இறக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கை வருடாவருடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது .சுத்தம் செய்ய தனி நபரை நியமிக்க கூடாது எனவும் , இது தொடர்பாக ஏதேனும் தவறு இருந்தால் கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதியப்படும் எனவும், மேலும் அதில் பாதிக்கப்படும் இறந்தவரின் குடும்ப வாரிசுகளுக்கு 15 லட்ச ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் அறிவித்தது.

இதுபோன்று அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்ற ஓரிரு நாளிலேயே இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வி.ஆர்.பி.சத்திரம் பகுதியில் நோக்கியா தொழிற்சாலைக்கு எதிரே அமைந்துள்ளது சத்தியம் கிரான்ட் கேளிக்கை விடுதி.

இன்று காலை சத்யம் கிராண்ட் கேளிக்கை விடுதியில் செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்வதற்கு கச்சிபட்டு பகுதியை சேர்ந்த நவீன் குமார், திருமலை, ரங்கநாதன் ஆகியோர் வந்துள்ளனர்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உள்ளே இறங்கியவர்களை விஷவாயு தாக்கி  மூவரும் தொட்டிக்குள் விழுந்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வீரர்கள் 2500 சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை இரு‌ உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு நபரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் உள்ளதால் அதிக அளவில் வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இதுவரை இரண்டு சம்பவங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கினாலும், அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இதற்கான பயிற்சி பெற்ற ஊழியர்களின் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் பல்வேறு வகையில் வலியுறுத்தினாலும் , பெரிய நிறுவனங்களில் இது போன்று அரசு விதிகளை மீறி குறைந்த பொருட்செலவில் இதனை மேற்கொள்வது பெரும் வருத்தம் அளிக்கிறது.

இனி வரும் காலங்களில் இது போன்று நிகழ்வுகளை தவிர்க்க அரசு விதிமுறைகளை கடுமையாக விதித்து முறைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News