முதல்வன் பட பாணியில் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அமைச்சர் சக்கரபாணி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு விதிகளை மீறிய 4 ஊழியர்களை அமைச்சர் சக்கரபாணி சஸ்பெண்ட் செய்தார்.

Update: 2022-05-02 09:45 GMT

ஆய்வு செய்தார் அமைச்சர் சக்கரபாணி.

தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி இன்று காஞ்சியில் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரம் , நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் , சிவில் சப்ளை குடோனில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

தாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்ரபாணி பொதுமக்களுக்காக வைக்கபட்ட புகார் பெட்டி எங்கே என கேட்டார்..

மேலும் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வதற்கு முன் ஈரப்பதம் கண்டறியும் கருவியை ஆய்வு செய்து ஊழியரிடம் எவ்வாறு தரம் பிரிப்பது என ஊழியர்களிடம்  கேள்வி எழுப்பினார்.

அதன் பின் அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய எவ்வளவு கட்டணம் செலுத்துகிறீர்கள் என்று கேட்டபோது ,  விவசாயி 65 ரூபாய் என கூறியதை கேட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைக் கண்ட விவசாயி உடனடியாக பேச்சை மாற்றி 50 ரூபாய் மட்டுமே செலுத்துவதாக கூறியதை தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு ,  ஊழியர்களின் முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அங்கு பணிபுரியும் 4 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதிதேவிக்கு உத்தரவிட்டார்.

இதைக்கண்ட அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்து ஒருகணம் திகைத்து நின்றனர். மேலும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் புகார் பெட்டி வைக்க கூறியதை அடுத்த கொள்முதல் நிலையத்தில் பார்ப்பேன் என கூறினார்.

அடுத்த ஆய்வுப் பகுதியான விஷால் பகுதிக்கு சென்றபோது அங்கு பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் பள்ளிகளில் வைக்கப்பட்ட மக்கள் மனசு என்ற புகார் பெட்டி இங்கு உடனடியாக எடுத்து வந்து அமைத்தது ஆய்வில் கண்டறிந்து மண்டல மேலாளரை அமைச்சர் எச்சரித்தார்.

அங்கிருந்த ஊழியர்கள் அனைவரிடம் அதிகாரி உட்பட அனைவரும் விதிகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டால் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள் என பொதுமக்கள் முன்னிலையிலேயே எச்சரிக்கை விடுத்தது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆய்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார் காஞ்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி. எம். குமார் மற்றும் கூட்டுறவு, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News