செப்டம்பர் மாத சம்பளம் கிடைக்காமல் அவதியுறும் ஆசிரியர்கள்..!

மத்திய மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் ஒருங்கிணைந்த கல்வித்திட்ட பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படாததால் 32,500 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-03 04:55 GMT

மத்திய மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (கோப்பு படம்)

தமிழகத்தில், 32,500 ஆசிரியர்களுக்கு, கடந்த (செப்டம்பர் )மாதத்துக்கான சம்பளம் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'மத்திய அரசைக் காரணம் காட்டும் தமிழக அரசை ஆசிரியர்கள், தமிழக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 15,000 பேரும், ஒப்பந்த அடிப்படையில் பகுதி 17,500 பேரும் என மொத்தம், 32,500 பேர் அந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் நேற்று வரை வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கூறும்போது,

இந்தாண்டு, இந்த திட்டத்திற்காக, 3,585 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசு, 1,434 கோடி ரூபாயையும், மாநில அரசு 2,151 கோடி ரூபாயையும் வழங்க வேண்டும். இதில், மத்திய அரசு முதல் காலாண்டு நிதியாக, 573 கோடி ருபாய் வழங்க வேண்டும்; ஆனால், அந்த காலாண்டு நிதியை இதுவரை வழங்கவில்லை.

அதேபோல், கடந்த ஆண்டுக்கான நிதியிலும் 249 கோடி ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதக தெரிகிறது.. நிலுவை நிதி மற்றும் இந்தாண்டுக்கான காலாண்டு நிதி என மொத்தம் 822 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டும்.

தமிழக அரசு, மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் சேராமல் உள்ளதால், இந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதை விடுவிக்கும்படி, முதல்வர் ஸ்டாலின், கடந்த 27ம் தேதி, பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் நிதி கிடைக்காததால்தான், எங்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற வேண்டியது, தமிழக அரசின் பொறுப்பு.

பொதுவாக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மிகக்குறைந்த சம்பளத்தில்தான் பணியாற்றி வருகின்றனர். சாதாரணமாகவே அவர்களுக்கு சம்பளம் போதாததால் அவர்கள் மாதத்தின் மத்தியில், கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், இன்னும் சம்பளம் வழங்கப்படாததால் இப்போது மாதத் துவக்கத்திலேயே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் சம்பளம் வாங்கி கடனை திருப்பித் தரலாம் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது, அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது என்று வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

தமிழக அரசு, மத்திய அரசைக் காரணம் காட்டி எங்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தாமல் , மனிதநேயத்துடன் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, பிற துறைகளுக்கான நிதியிலிருந்து விதிகளுக்கு உட்பட்டு, 25 கோடி ரூபாயை பள்ளிக் கல்வி துறைக்கு மாற்றி, எங்களுக்கான சம்பளத்தை வழங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.கூறினர்.

Tags:    

Similar News