தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மத்திய நீர் ஆணையம்
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், கடலோரப்பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மத்திய நீர் ஆணையம் தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.;
மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள வரைபடம்.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கடலோர தமிழகத்தில் பரவலாக சற்று மழை குறைந்த நிலையில் இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என மத்திய நீர் ஆணையம் தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.