சிவகாசி வங்கியில் ரூ.7.5 கோடி மோசடி..!

சிவகாசியில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.7.5 கோடி மோசடி நடந்துள்ளது.

Update: 2024-03-04 06:01 GMT

தங்க நகைகள் (கோப்பு படம்)

சிவகாசியில் உள்ள பொதுத்துறை வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித்(45). இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகின்றன.

ரஞ்சித் கடந்த 2 நாட்களாக சிவகாசி கிளையில் தணிக்கை மேற்கொண்டார். அதில் பல நகைக்கடன் கணக்குகள் நீண்ட காலமாக திருப்பப்படாமல் இருந்துள்ளன. அந்த கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது, அவை போலியான நகைகள் என்பது தெரியவந்தது. வங்கி வாடிக்கையாளரான நகைக் கடை உரிமையாளர் பாலசுந்தரம் என்பவர் தனக்கு தெரிந்த 56 பேர் மூலம் 126 கணக்குகளை தொடங்கி நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன் 15,427 கிராம் போலி நகைகளை அடகு வைத்து, ரூ.7,55,56,509 நகைக்கடன் பெற்றது தெரிய வந்தது.

இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரில் நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோர் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் பாலசுந்தரம், முத்துமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News