முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக மீண்டும் ஆவணப்படம்: கேரளாவின் விஷமத்தனம்

Mullaperiyar Dam Latest News -முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் மீண்டும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர்.

Update: 2022-10-21 07:32 GMT

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

Mullaperiyar Dam Latest News

-முல்லைப்பெரியாறு அணை பிரச்னை குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என இரண்டுமுறை தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புகளை கண்டுகொள்ளாத கேரளா, பேபி அணையினை பலப்படுத்தவும் தடை ஏற்படுத்தி வருகிறது.

பேபி அணையினை பலப்படுத்தினால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். அப்படி உயர்த்தினால் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கேரள மாபியா கும்பல் கட்டியுள்ள நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் நீரில் மூழ்கி விடும். உலக அளவில் பணத்திலும், ஆள் பலத்திலும் செல்வாக்கு பெற்ற கேரள மாபியா கும்பல் தான், தற்போது கேரள அரசையும் இயக்கி வருகிறது. தமிழகத்தின் பக்கம் நியாயம் உள்ளது என்பதை உணர்ந்தாலும் கேரள அரசு செயல்பட முடியாமல் போனதற்கு இந்த மாபியா கும்பலே காரணம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் பலமுறை குற்றம் சுமத்தி உள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுடன் ரூல்கர்வ் முறையினையும் கொண்டு வந்த கேரளா மாபியா கும்பல், தற்போது அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. மழை தொடர்ந்தால் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டி விடும். இதனை தடுக்க முயன்ற கேரள மாபியா கும்பல், கேரளாவில் ரசல்ஜோய் போன்ற சிலரை பயன்படுத்தி அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்டு வருகிறது.


இன்று புதிதாக மேலும் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு உள்ளது. இந்தபடம் வெளியானதும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 'கேரள வழக்கறிஞர் ரசல்ஜோயினை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரள மக்களிடம் தவறான விஷம பிரச்சாரம் செய்பவர்களை கேரள அரசு தடுக்க வேண்டும்.

இதனை கேரள அரசு செய்ய தவறினால், நாங்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை நடத்துவோம். அதில் நிச்சயம் வெற்றியும் பெறுவோம்.

கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் இணைத்து விட்டால் முல்லைப்பெரியாறு அணை பிரச்னை இருக்கவே இருக்காது. இந்த போராட்டங்களை எப்படியெல்லாம் நடத்துவது என்பது குறித்து நாங்கள் ஏற்கனவே மிகவும் தெளிவாகவே திட்டமிட்டுள்ளோம். இதனால் இனி எங்கள் கவனம் இதில் தான் இருக்கும். இவ்வாறு கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News