கோவில் சிலைகளை ரூ. 12 கோடிக்கு விற்க முயற்சி; நான்கு பேர் கைது

Crime News in Tamil -திண்டுக்கல் கோவிலில் திருடப்பட்ட ஐந்து சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சித்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-18 05:24 GMT

திண்டுக்கல்லில் வடமதுரை பகுதியில் உள்ள கோவிலில் திருடப்பட்ட ஐந்து சிலைகளை, போலீசார் மீட்டனர். 

Crime News in Tamil -திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மலை மீது ஆதிநாதப்பெருமாள் - ரங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த பழமையான கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  கோவிலுக்கு வந்த பக்தர்களில் சிலர், கடந்த 2007-ம் ஆண்டு புதிதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய ஐந்து சிலைகளை காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர். அவர்கள் வழங்கிய நன்கொடையை கொண்டு, சுவாமிமலையில் உள்ள பிரபல சிற்பியிடம் ஐந்து சிலைகளையும் செய்து கொடுக்கும் பணி வழங்கப்பட்டது. சிலைகளை அவர்கள் செய்து கொடுத்த நிலையில், ஐந்து புதிய சிலைகளும் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்தாண்டு (2021) மே மாதம் 21ம்தேதி கோவிலுக்குள் முள்ளிப்பாடியை சேர்ந்த யோவேல் பிரபாகர் (வயது 31) டி.கல்லுப்பட்டியை சேர்ந்த சேகர், சீலைவாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வெங்கடேசன் ஆகிய மூன்று பேர் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த கோவிலின் செயலாளர் சண்முகசுந்தரம், பூசாரிகள் பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரை மிரட்டி, ஒரு அறையில் அடைத்து ஐந்து சிலைகளையும் திருடிச் சென்றனர்.  சிலைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து, கோவிலில் உள்ள யாரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சிலைகளை விற்கும் புரோக்கர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த பால்ராஜ் (42), தினேஷ்குமார் (24), இளவரசன் (38) ஆகியோரிடம் ரூ.12 கோடிக்கு சிலைகளை விற்றுத்தருமாறு, கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தவுடன்,  குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிலை வாங்குபவர் போல், புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோரை அணுகினார். ஆனால், அவர் மீது சந்தேகம் அடைந்த புரோக்கர்கள், சிலைகளை காட்ட மறுத்துவிட்டனர். இதனால், இரண்டு வாரம் தொடர்ந்து புரோக்கர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசி, புரோக்கர்களை சம்மதிக்க வைத்தார். 

அதன்பிறகு, புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் சிலைகளை வைத்திருந்த யோவேல் பிரபாகரை தொடர்பு கொண்டு, சிலைகளை கொண்டுவருமாறு கூறியுள்ளனர்.  சிலைகளை குறிப்பிட்ட இடத்துக்கு, அவர் கொண்டுவந்தார். அவருடன் புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோரும் வந்தனர். அப்போது கூடுதல் டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் பதுங்கியிருந்த போலீசார், நான்கு பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். ஐந்து சிலைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஈஸ்வரன் என்ற வெங்கடேசன், சேகர் ஆகியோரை போலீசார்  தேடி வருகின்றனர். 

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News