இரண்டு மாதங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் இன்று முதல் பஸ் போக்குவரத்து

ஊரடங்கை தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் மகிழ்ச்சி

Update: 2021-06-28 00:54 GMT

இரண்டு மாதங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்தது தற்போது நோயின் தன்மை குறைய ஆரம்பித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இன்று (28.06.2021) முதல் 23 மாவட்டங்களில் பேருந்துகள் சேவை இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பொதுப் போக்குவரத்துக்கு இன்று அனுமதி வழங்கி உள்ளது . அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( மதுரை ) , திண்டுக்கல் மண்டலம் மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை 06.00 மணி முதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் அரசு போக்குவரத்து கழகம் நாகல் நகரில் உள்ள இரண்டாவது யூனிட்டில் பொது மேலாளர் மேற்பார்வையில் நகர் மற்றும் புறநகரப்பேருந்துகளுக்கு கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது.  

மேலும், பொது மக்கள் எளிதில் தெரிந்துக்கொள்ளும் வகையில் சாதாரண நகரப்பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற ஸ்டிக்கர் பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறம் ஒட்டப்பட்டுள்ளது.  அதேபோல் பேருந்தில் பயணிக்கும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர் மற்றும் திருநங்கையர்கள் ஆகியோரிடம் கனிவாகவும், அன்புடனும் நடந்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதை கண்காணித்து பொது மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து இயக்கும் பொருட்டு பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய நிறுத்தங்களில் சிறப்பு கண்காணிப்புப் பணிக்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மேலும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்ட மாவட்டமான திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர்க்கு கள்ளிமந்தயம் அடுத்த அப்பியம்பட்டி நால்ரோடு வரையிலும் , பழனி வழித்தட மார்க்கத்தில் சாமிநாதபுரம் ( மடத்துக்குளம் ) வரையிலும் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , சேலம் வழித்தட மார்க்கத்தில் வேடசந்தூர் வரையிலும், மற்றும் திண்டுக்கல் கரூர் ( வழி ) குஜிலியம்பாறை வழித்தடத்தில் கூடலூர் வரையிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடக்கத்தினால் பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News