விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்.

Update: 2021-09-03 13:11 GMT

வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது பச்சளநாயக்கன்பட்டி. இந்த கிராமத்தில் வசிக்கும்  70 விவசாயிகள் வீட்டு மனைப்பட்டா கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கு மனு கொடுத்துள்ளனர். மேலும், தனியாரிடம் உள்ள நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வாங்கி ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்க நில உரிமையாளரே சம்மதித்து எழுதிக்கொடுத்துள்ள நிலையில், நிலத்தை ஆய்வுசெய்து, பயனாளிகள்  குறித்த விசாரணை செய்து அனைத்து பணிகளும் முடிவுற்றது. இந்நிலையில் முன்வரைவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பாமல், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஏதோ உள்நோக்கத்தோடு‌ இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாகவும், எனவே வேறுவழியின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பத்தினர் அனைவரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் குடியேறுவதாகவும் தெரிவித்தனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து போராட்டகாரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News