பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை ரூ.4 கோடியை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டபோது பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியை தாண்டியது

Update: 2022-01-12 12:07 GMT

பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில்  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்ததால் 17 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது.

இதையடுத்து திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இருநாள் எண்ணிக்கையாக மொத்த காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் நான்கு கோடியே 33 இலட்சத்து 56 ஆயிரத்து 610 கிடைத்துள்ளது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வீடு, தொட்டில், வேல், கொலுசு, போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 1,121 கிராமும், வெள்ளி 17 ஆயிரத்து 736 கிராமும் கிடைத்தது. பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 192 ம் கிடைத்தன.

இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், மதுரை அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், திண்டுக்கல் மண்டல உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News