'நகராத' நகரப் பேருந்துகள் - பழனியில் பயணிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரசு அறிவித்தபடி இன்று நகரப்பேருந்துகள் இயங்காததால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2021-06-28 09:49 GMT

பழநி பேருந்து நிலையத்தில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகரப்பேருந்து.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொரோனா தாக்கம் அதிகம் உள்ள  11மாவட்டங்கள் தவிர,  மற்ற மாவட்டங்களுக்குள், இன்று முதல்  பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, இன்று அதிகாலை முதலே பழனி பேருந்து நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் அதிகரித்தது. எனினும், பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகள் எதுவும் இயக்கப்படாமல், நிறுத்தியே வைக்கப்பட்டிருந்தன. இதனால்,  பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பழனி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, வழக்கமாக 22அரசு நகரப்பேருந்துகளும், 56தனியார் நகரப்பேருந்துகளும், 48மினிபஸ்களும் இயக்கப்படுகிறது. இவற்றில், தனியார் நகரப்பேருந்துகள் மற்றும் மினிபஸ்கள் எதுவும்‌ இயக்கப்படவில்லை. அதே நேரம், அரசு பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றிலும் பொதுமக்கள் கூட்டமாக ஏறு முற்படுவதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பழனியில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும்‌ செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகளை, அரசு போக்குவரத்துக் கழகம்  இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரம், மாலைக்குள் அனைத்து நகர பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News