பழனி அடிவாரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து
பழனியில், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் சேதமடைந்தன.;
பழநி அடிவாரத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாலசமுத்திரம் செல்லும் சாலையில், தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், பழனியை சேர்ந்த ஜாபர் என்பவர், குடம் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.
பிளாஸ்டிக் பொருள் என்பதால், எளிதாக தீ பரவத் தொடங்கியது; மளமளவென்று கடை முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது. இதன் காரணமாக கடையில் முற்றிலும் எரிந்து, பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 5லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானதாக தெரிகிறது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடை அமைந்துள்ள பகுதியில் திருமண மண்டபங்கள் உள்ளன. திருமணத்திற்கு வைக்கப்பட்ட வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.