பழனி முருகன் கோவில் உண்டியலில் 12 வெளிநாட்டு கரன்சி, ரூ.1.10 கோடி காணிக்கை

பழனி முருகன் கோவில் உண்டியலில் 12 வெளிநாட்டு கரன்சி, ரூ.1.10 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

Update: 2021-08-18 07:27 GMT

பழனி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியில் வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்.

தமிழகத்தில் உள்ள ஆன்மிக தலங்களில் முக்கியமானதாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது.

இங்கு திருவிழா மட்டுமல்லாது தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார்.

மதுரை மண்டல உதவி ஆணையர் விஜயன் மற்றும் பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காணிக்கை பொருட்கள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 121 கிராம் தங்கமும், 1562 கிராம் வெள்ளியும் , ஒரு கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 90 ரூபாய் மற்றும் 12 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாகக் கிடைத்தது. 

மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பொருட்களும், பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News