மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி : அமைச்சர் ஐ. பெரியசாமி

மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதால் கொடுக்கப்படும் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறினார்

Update: 2024-03-23 06:18 GMT

கூட்டத்தில் பேசும் அமைச்சர் ஐ பெரியசாமி 

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரத்தில் நடந்த சட்டசபை தொகுதி ஐஎன்டிஐஏ கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், சென்ற தேர்தலில்

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என காங்கிரஸ் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு மத்தியில் காங்கிரஸ் தி.மு.க., கூட்டணி ஆட்சி அமையாதது காரணம்.

ஆனால் இம்முறை மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கிய பொழுதும் நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தவர், முதல்வர் ஸ்டாலின். ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வாங்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். 6 முதல் 12 வரை படிக்கும் பெண்கள் உயர்கல்விக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மூலம் 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் முதல்வன் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எம். எல். ஏ.,செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  செயற்குழு உறுப்பினர் கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ, பாலபாரதி, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News