சாரல் மழையுடன் பனிப்பொழிவு: கொடைக்கானலில் மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது

Update: 2023-12-21 13:56 GMT

கொடைக்கானலில் நிலவும் பனிமூட்டம் 

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தாக்கமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் 2 நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து விட்டுவிட்டு சாரல்மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் காலை முதலே அடர்ந்த பனிமூட்டமும், சாரல்மழையும் பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சூரிய ஒளியே இல்லாத அளவிற்கு நகர்முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைச்சாலையில் எதிரில் நடந்து வருபவர்களும், வாகனங்களும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளது. இதனால் மாலை, இரவு நேரங்களை போல மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.

பனிப்பொழிவால் கொடைக்கானலில் சாலையோர வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்டடு வஉள்ளது. முக்கிய வீதிகளில் உள்ள கடைகளும் பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது. ஏரிச்சாலையில் வியாபாரிகள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

நகரில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.


இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூக்கும். அதன்படி தற்போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

இந்த சிலுவை மலர்கள் குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும். சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்துக்குலுங்கும். இந்த சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். செட்டியார் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களிலும் நடவு செய்யப்பட்ட சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது.

இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனைதொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் செய்யப்பட்டு வருகின்றன

Tags:    

Similar News